St CEYLONCNEWS: சாம்பல் பறவைகள்.... -

புதன், 10 மார்ச், 2021

சாம்பல் பறவைகள்.... -

சும்மா செத்தவர்கள் நாம் என்று

சும்மா கணக்கிட்டீரோ...?
ஷஹாதாவை மொழிந்து
சாகா வரம் பெற்றவர்கள் நாங்கள்...
மறுமை வாழ்வுக்கும் சேர்த்து
பயணச் சீட்டோடு வந்தவர்கள் நாங்கள்
பயந்து பயந்து போவதற்கு
எங்கள் பகுத்தறிவொன்றும்
பூச்சியமானதல்ல...
பறவைகளில் நான்கைப் பிடித்து
அவற்றை மை போல அரைத்து மாவாக்கி
ரொட்டி உருண்டைகள் நாலாக்கி
நாற்திசை மலைகளில் வைத்தாலும்
மறுபடியும் அதே பறவைகளாய்
பறந்திடச் செய்யும் படைத்தவனுக்கு
எங்கள் ஒரு பிடி சாம்பல் போதும்....
தாமதிக்காமல் எரியுங்கள் பொசுக்குங்கள்
உறவுகள் தள்ளி தீ மூட்டுங்கள்...
அன்பானவர்களை தூர தூர என விரட்டி
எங்களை அநாதைப் பிணமாய்
அனலில் வாட்டுங்கள்...
அல்லாஹ் என கதறும் போதே
அனல் குண்டம் பூஞ்சோலையானது போல
ஆழிப் பெருங்கடல்
அலையொதுங்கி பாதையானது போல்
சாம்பல் மேட்டிலிருந்து
சாவை வென்று எழுந்திடச் செய்ய
அந்த வல்லோன் மட்டும் போதாதா....?

-கவிதாயினி ஜெஸீமா ஹமீத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக